Publish Date: Thu, 06 Sep 2018 (20:37 IST)
Updated Date: Thu, 06 Sep 2018 (20:38 IST)
நவரச நாயகன் கார்த்திக், தேர்தலின்போது மட்டும் திடீர் அரசியல் செய்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் தற்போது மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இரண்டு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும், இன்னும் மூன்று நாட்களுக்கு பின் கட்சியின் பெயரில் சிறிய மாற்றமும், நிர்வாகிகள் மாற்றமும் செய்து மதுரையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.
கார்த்திக் கடந்த 2006ஆம் ஆண்டு பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து முதலில் அரசியலில் குதித்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அதே ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 15000 வாக்குகள் பெற்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த கார்த்திக் தற்போது கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் மீண்டும் குதிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.