Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதிப்போர் நடந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியதாக அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மீது பல தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மறுத்துவந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, இறுதிப்போரில் இந்தியா உதவியதால்தான் விடுதலைப்புலிகளை வீழ்த்தினோம்' என்று கூறியிருந்தார்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழக மக்கள், 'ராஜபக்சேவின் இந்த கருத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி பெற்ற திமுக இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியிடம் விளக்கம் கேட்பாரா? கூட்டணி காங்கிரஸ் மன்மோகன் அரசு இலங்கைத்தமிழர் படுகொலைக்கு துணைபோனது அம்பலம்' என பதிவு செய்துள்ளார். தமிழிசையின் இந்த கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன விளக்கமளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்