Publish Date: Sun, 30 Mar 2025 (14:29 IST)
Updated Date: Sun, 30 Mar 2025 (14:31 IST)
மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சில சாலைகள் இரண்டாம பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி அட்சைந்துள்ளனர்.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான பேரழிவு நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தூரத்தில், அந்த நாளின் மதிய நேரத்தில் (12 மணியளவில்) முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளியாக பதிவானது. அதற்குப் பின்னர், 6.4 புள்ளியாக இன்னும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலாய் நகரின் வடமேற்கே 13 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிகமாகப் பீதியடைந்துள்ளனர். முக்கிய சாலைகள் பிளந்து பாதிப்பு அடைந்துள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் மியான்மருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கிடைத்த தகவலின்படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.