எத்தியோப்பியாவில் உள்ள ஹெய்லி கூப்பி எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை 10,000 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக வெடித்ததில் இருந்து கிளம்பிய சாம்பல் மேகம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் டெல்லியை அடைந்தது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செங்கடலை கடந்து வந்த இந்த மேகம், மேற்கு ராஜஸ்தானில் இந்தியாவிற்குள் நுழைந்தது.
இந்த சாம்பல் மேகம் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி பகுதிகளில் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் பரவியுள்ளது. இந்த உயரத்தில் இருப்பதால், தரையில் உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய விமான போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அவசர ஆலோசனையை வெளியிட்டது. எரிமலை சாம்பல் பாதிக்கப்பட்ட வான்வெளி வழியாக பறப்பதை தவிர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானிகள் எஞ்சின் அசாதாரண செயல்பாடுகள் குறித்து உடனடியாக புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக கொச்சியிலிருந்து துபாய் மற்றும் ஜெட்டாவிற்கு செல்லவிருந்த இரண்டு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆம்ஸ்டர்டாம்-டெல்லி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.