Publish Date: Mon, 28 Nov 2022 (15:42 IST)
Updated Date: Mon, 28 Nov 2022 (15:50 IST)
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியாவில் சாமியாரும், பதஞ்சலி நிறுவனராகவும் இருப்பவர் பாபா ராம்தேவ். சமீபத்தில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபா ராம்தேவ் “பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருப்பார்கள். எதுவும் அணிந்திருக்காவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க கோரி மகளிர் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டு மகளிர் ஆணைய தலைவருக்கு பாபா ராம்தேவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருவதாகவும், பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பேசியதாக வெளியாகும் வீடியோ முழுமையானது அல்ல, எடிட் செய்யப்பட்டது என்றும், எனினும் யார் மனமாவது புண்படும் வகையில் தனது பேச்சு அமைந்திருந்தால் வருந்துவதாகவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.