Publish Date: Sat, 23 Nov 2019 (08:45 IST)
Updated Date: Sat, 23 Nov 2019 (08:47 IST)
நாகை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பெண்ணுக்கு ஊசிப்போடப்பட்ட நிலையில் அதில் பாதி உடைந்து அவரின் இடுப்பிலேயே தங்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி என்ற பெண். இவர் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் விதமாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், ஊசி போட சொல்லி பரிந்துரைத்துள்ளார். அவருக்கு செவிலியர் ஊசி போட்டபோது அதன் ஒரு பகுதி உடைந்து உள்ளேயே தங்கிவிட்டது.
ஆனால் இதை அவரிடம் சொல்லாமல் அந்த செவிலியர் மறைத்துள்ளனர். இதனால் பார்வதிக்கு இடுப்பில் வலி இருந்துகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அவரின் இடுப்புப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் உடைந்த ஊசி இருப்பது தெரிந்துள்ளது. அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணமும் அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.