Publish Date: Tue, 16 Jun 2026 (12:02 IST)
Updated Date: Tue, 16 Jun 2026 (12:04 IST)
தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு கீழ் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி எனவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர் விஜயும் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது பயிர் கடன் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி என கூறியது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை ஏற்க மறுத்து பல விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்..
தேர்தலுக்கு முன்பு தவெக சொன்னது ஒன்று.. தேர்தலுக்குப் பின் வெற்றி பெற்று தவெக அரசு செய்தது ஒன்று என விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில்தான் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 75 ஆயிரம் வரையிலான பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் தற்போது அறிவித்திருக்கிறார். இதற்கு முன்பு 50 ஆயிரம் வரையிலான பயிர் கடன் மட்டுமே 100 சதவீத தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
75 ஆயிரத்திற்கும் மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ 35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் வரையும் பயிர் கடன் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் விஜயின் இந்த உத்தரவால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் ரூ 5932.23 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது.