Publish Date: Fri, 10 Aug 2018 (13:09 IST)
Updated Date: Fri, 10 Aug 2018 (13:13 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைவு பெற்றுள்ள நிலையில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் வகித்து வந்த தலைவர் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்படலாம் எனவும், கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. கருணாநிதியின் நீண்ட கால நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன், கருணாநிதியின் மறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக அந்த பதவியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதால், அந்த பதவி வேறு ஒருவருக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், ஸ்டாலின் தற்போது செயல்தலைவர் மற்றும் பொருளாளர் என இரு பதவிகள் வகித்து வருகிறார். எனவே, ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டால், அவர் வகித்து வந்த பதவிகளுக்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.