Publish Date: Sat, 05 Sep 2026 (14:09 IST)
Updated Date: Sat, 05 Sep 2026 (14:10 IST)
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.என். நேரு மற்றும் அவரின் சகோதரரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. அங்கு முறைகேடாக பணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. திரு. கே.என்.நேரு அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க