Publish Date: Mon, 30 Sep 2019 (19:38 IST)
Updated Date: Mon, 30 Sep 2019 (19:40 IST)
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பித்த மாணவரை பிடிக்க போலீஸார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவதை அறிந்ததுமே தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டார்.
இர்ஃபான் தந்தை சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரனையில் இர்ஃபான் ஏற்கனவே மொரிசியஸில் மருத்துவம் படித்து வந்ததும், தற்போது தப்பி சென்று மீண்டும் அந்த கல்லூரியில் படிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து மொரிசியசில் உள்ள சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தருமபுரி கல்லூரியிலிருந்து விவரங்கள் அனுப்பப்பட்டன. அதன்படி இர்ஃபானை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மொரிசியஸ் அரசாங்கம் சம்மதித்துள்ளது.
விமானம் மூலமாக இந்தியா வரும் இர்ஃபானை பிடிக்க விமான நிலையங்களை உஷார் படுத்தியிருக்கின்றனர். சஃபி அளித்த வாக்குமூலத்தில் மேலும் இரண்டு இடைத்தரகர்கள் பற்றி தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.