Publish Date: Mon, 09 Nov 2020 (14:34 IST)
Updated Date: Mon, 09 Nov 2020 (14:37 IST)
தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் தயாரிப்பாளர்களோடு நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் புதிய படங்கள் வெளியாகாது என செய்திகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை முடிவடையாத நிலையில் உள்ளது.
நாளை திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை புதிய படங்கள் வெளியாகாது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை முதல் திரையரங்குகளை திறந்து முன்னதாக வெளியான படங்களையே திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.