Publish Date: Sun, 12 Jul 2026 (12:55 IST)
Updated Date: Sun, 12 Jul 2026 (12:50 IST)
திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்பட்டால் அதை உடைப்பேன் என்று எச்சரித்தவர் சீமான். அத்தகைய கடுமையான வெறுப்பு அரசியலை முன்னெடுத்த சீமானுடன் தற்போதைய திமுக தலைவர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் நட்பாகப் பழகி வருவது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. "கருணாநிதி சிலையை உடைப்பேன் என்று பேசிய சீமானுடன் திமுக நட்பு பாராட்டுகிறது. ஆனால், கொள்கை ரீதியாக திமுகவுடன் பயணிக்கும் என்னை தனிமைப்படுத்துவதோடு, ஒரு எதிரியாக பார்க்கிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக போன்ற மதவாத சக்திகளை எதிர்ப்பதில் விசிக உறுதியாக இருந்தாலும், திமுக தலைமை தங்களை ஓரங்கட்டுவது திருமாவளவனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொள்கைக்காக போராடும் தங்களை விட, கடும் விமர்சனங்களை முன்வைத்தவருடன் திமுக இணக்கமாக இருப்பது எந்த வகையில் நியாயம் என்ற திருமாவளவனின் இந்த கேள்வி, திமுக கூட்டணிக்குள் இருக்கும் விரிசலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
திராவிட கொள்கைகளை பேசி வரும் திமுக, தேர்தல் அரசியல் லாபத்திற்காக தனது கொள்கை ரீதியான நண்பர்களைக் கையாளுவதில் காட்டும் இந்த இரட்டை வேடம் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.