Publish Date: Mon, 02 Sep 2019 (09:46 IST)
Updated Date: Mon, 02 Sep 2019 (09:47 IST)
திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அமமுகவினர் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று டிடிவி தினகரன் திருச்சி வந்தார். அங்கிருந்து அவர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக திருநெல்வேலி சென்றார். அப்போது திருச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் ‘முதலீடுகளைக் கொண்டுவருவதாக சொல்லி முதல்வர் சென்றுள்ளார். அதைப் பற்றி விமர்சிக்கவில்லை. கொண்டுவந்தால் மகிழ்ச்சிதான். ஆனால் நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும் போது முதலீட்டாளர்கள் எப்படி இங்கு தொழில் தொடங்க வருவார்கள் என்று தெரியவில்லை’ எனக் கூறினார்.
அதுபோல தங்க தமிழ்ச்செல்வன் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர் ‘ அமமுகவில் இருந்தபோது திமுகவைக் கொள்கையே இல்லாத கட்சி என விமர்சித்தார். அங்கேயாவது 11 மணிக்கு மேல் போன் பண்ணி திமுக தலைவர்களைப் பற்றி குறை சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என அறிவுரைக் கூறும் விதமாகக் கூறியுள்ளார்.