Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லவுள்ளது.
இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியபோது, என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள். எங்கள் வழக்கில் 3வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்படியும் அந்த தீர்ப்பு வெளிவருவதற்கு ஓராண்டு காலம் ஆகலாம்.
என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும். பொதுமக்களும் பயன் அடையட்டும். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் கூறியபோது, 'தங்கத்தமிழ்ச்செல்வனின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு. அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றாலும் மீதியுள்ள 17 எம்.எல்.ஏக்கள் வழக்கை வாபஸ் பெற மாட்டார்கள்' என்றும் அவர் கூறினார். தங்கத்தமிழ்செலவன் வாபஸ் பெற்றால் அவரது தொகுதிக்கு விரைவில் தேர்தல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.