Publish Date: Mon, 27 Nov 2017 (15:42 IST)
Updated Date: Mon, 27 Nov 2017 (15:45 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா இன்று அறிவித்துள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அதிமுக வேட்பாளரை விரைவில் அறிவிக்கவுள்ளது. தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். திமுக சார்பில் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என தமிழிசை தெரிவித்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் நான் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக தீபா இன்று அறிவித்துள்ளார்.